புதுடெல்லி: முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார்.
இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஆழமான புரிதலும் அனுபவமும் உண்டு. ஏறக்குறைய 39 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், வரும் மே 31-ஆம் தேதி பொறுப்பேற்பார். தற்போதைய தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதிக்கு பிறகு இவர் பொறுப்பேற்கவுள்ளார். 1987-ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
Government of India appoints Lt Gen NS Raja Subramani PVSM, AVSM, SM, VSM (Retd.) as the next Chief of Defence Staff, who will also serve as Secretary, Department of Military Affairs. He will assume office after Gen Anil Chauhan completes his tenure on 30 May 2026.A highly… pic.twitter.com/wnbeitcpyX
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளுமே தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார். அதேபோல், வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள உயரிய ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரு அதிகாரிகளின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

