மேற்கு வங்காளத்திலும், பீகாரிலும் புதிதாக அமைந்துள்ள அரசுகள், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என இரு மாநில அரசுகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காளத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஆனால், இறந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத எவரும் மேற்கு வங்க மக்களின் நலத்திட்டங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என்றும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்தவர்களுக்கு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை நலத்திட்ட உதவி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அனைத்து அரசு திட்டங்களையும் பெறலாம் என்றும், ரேஷன் அட்டைகள் சரிபார்க்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அசோக் கீர்த்ததனியா கூறியுள்ளார்.
இதேபோல், பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், "பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட எந்தவொரு அரசு சலுகையையும் பெற முடியாது. இவர்களின் வங்கி பாஸ் புத்தகங்களும் உரிய காலத்தில் ரத்து செய்யப்படும்" என்று அறிவித்தார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு, சுமார் 5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம், தகுதியானவர்கள் மட்டுமே அரசு நலத்திட்டங்களைப் பெறுவதை உறுதி செய்வதோடு, முறைகேடுகளையும் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.