பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், அரசு தரப்பு சாட்சியாக மாற தாக்கல் செய்த மனுவை திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்த அதிரடி முடிவால் வழக்கின் போக்கு மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தனக்கு நட்பு இருப்பதாக கூறி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக கூறி, டிடிவி தினகரன் தரப்பிற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபடியே தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கிடைத்த பணத்தைக் கொண்டு, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சுகேஷ் வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்த பணமோசடி வழக்கில் ஜாக்குலின் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் நோக்கில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாற டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், ஜாக்குலின் ஒரு பாதிக்கப்பட்ட நபர் அல்ல, மாறாக குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தில் பலன்களை அனுபவித்தவர் என்று அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த வலுவான எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜாக்குலின் தரப்பு வழக்கறிஞர் தனது மனுவைத் திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரஷாந்த் சர்மா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த திடீர் வாபஸ், வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.