ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் யாரும் எட்டாத புதிய சிகரத்தை எட்டியுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இதுவரை எந்தவொரு ஜாம்பவானும் படைத்திராத இந்த மாபெரும் சாதனையின் மூலம், தோனி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களையும் அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 57வது லீக் போட்டியில், விராட் கோலி தனது ஐபிஎல் பயணத்தில் 279வது போட்டியில் களமிறங்கினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர், 278 போட்டிகளுடன் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த சாதனையை பகிர்ந்து கொண்டிருந்தனர். அவர்களை முறியடித்து கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்காகவும், ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா (265 போட்டிகள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (257 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர். ஆனால், விராட் கோலி தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே அர்ப்பணித்துள்ளார். 2008ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து 2026 வரை, தொடர்ந்து 19 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 279 போட்டிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் 199 போட்டிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
இந்த பிரம்மாண்டமான சாதனை ஒருபுறம் இருக்க, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து 105 ரன்கள் குவித்ததன் மூலம், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 14000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மற்றொரு பொன்னான தருணமாகும்.