ராய்ப்பூர்: தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது வழக்கமான 'சேசிங் மாஸ்டர்' அவதாரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு பிரம்மாண்ட உலக சாதனையை படைத்து, விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார் 'கிங்' கோலி.
நேற்று ராய்ப்பூரில் நடந்த ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நிர்ணயித்த 193 ரன்கள் இலக்கை துரத்தியது. இதில் விராட் கோலி தனி ஒருவராக நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆரம்பம் முதலே நேர்த்தியாக விளையாடிய அவர், வெறும் 32 பந்துகளில் அரைசதத்தையும், 58 பந்துகளில் தனது 9வது ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்தார். இறுதியில் 60 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14000 ரன்களை கடந்த அதிவேக வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த இமாலய இலக்கை அடைய அவர் வெறும் 409 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதற்கு முன்னர், டி20 ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 423 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது கோலி அந்த சாதனையை முறியடித்துள்ளார். டேவிட் வார்னர் 431 இன்னிங்ஸ்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கடந்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக 'டக் அவுட்' ஆனதால் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால், தனது விமர்சகர்களுக்கு பேட் மூலமே பதிலடி கொடுத்துள்ள கோலி, ஐபிஎல் வரலாற்றில் தனது 9வது சதத்தை பதிவு செய்துள்ளார். இது இலக்கை துரத்தும்போது அவர் அடிக்கும் 3வது ஐபிஎல் சதம் ஆகும். மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் அடிக்கும் 2வது சதம் இது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த 5 இன்னிங்ஸ்களில் கோலி 54, 83, 18, 59 மற்றும் 105 என ரன்களை குவித்து அந்த அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். நிதானம், நேர்த்தி மற்றும் அபாரமான ஆட்டத்திறன் மூலம் கோலி தொடர்ந்து சாதித்து வருகிறார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு சதம் மூலம் பதிலடி கொடுத்து, கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் தான் என்பதை விராட் கோலி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.