அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பில், உலகையே உலுக்கி வரும் ஈரான் போர் நிறுத்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா-ஈரான் மோதலால் உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட பதற்றம், வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உலகளவில் பணவீக்கம் மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகியுள்ளன.
சீனா, ஈரானின் முக்கிய பொருளாதார ஆதரவாளராக விளங்குகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா, ஈரானுக்கு வர்த்தக மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இருப்பினும், நேரடி ராணுவ தலையீட்டை தவிர்த்து, தூதரக மற்றும் பொருளாதார ஆதரவை மட்டுமே சீனா வழங்கி வருகிறது.
இந்த முக்கிய சந்திப்பிற்காக, அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இது, அமெரிக்க அதிபர் ஒருவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்வது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத், மற்றும் கூகுள், ஆப்பிள், போயிங் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று சீன அதிபர் ஜின்பிங்குடன் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் ஈரான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் விரிவாகப் பேசுவார்.
மேலும், போயிங் நிறுவனம் சீனாவிடம் 500 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் அதிபர் ஜின்பிங் அளிக்கும் அரசு விருந்திலும் டிரம்ப் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின்போது, 'ஈரான் போர் குறித்து ஜின்பிங்குடன் பேசுவேன். ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்கள் வெற்றி பெறுவோம்' என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.