விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியையொட்டி திரையிடப்பட்ட வாழ்த்து வீடியோவில் இடம்பெற்ற ஒரு காணொளி தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த காணொளி தனது கவனத்திற்கோ, அனுமதிக்கு உட்பட்டோ வெளியிடப்படவில்லை என்றும், தனது மீது அன்பு கொண்ட சிலரால் வெளியிடப்பட்டதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எம்.எல்.ஏ. செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், திரு. விஜயபிரபாகரன் மற்றும் அவர் சார்ந்த கட்சிக்கு எதிராக தமக்கோ, தமமைச் சார்ந்தவர்களுக்கோ எந்தவிதமான எண்ணமும் கிடையாது என்பதை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, கடந்த ஏப்ரல் 11, 2026 அன்று நடைபெற்ற ஒரு நேர்காணலில், 'அண்ணன் விஜயபிரபாகரன் அவர்களுக்கு அவருடைய அரசியல் பாதை உள்ளது, எனக்கு என்னுடைய அரசியல் பாதை உள்ளது. மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் அனைவரும் செயல்படுகிறோம். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்' என்று தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவே தனது நிலைப்பாடு என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாம் ஜனநாயக ரீதியில் நாகரிக அரசியலை மேற்கொள்பவர் என்பதற்கு அந்த நேர்காணலே சாட்சி என்றும், அந்த வீடியோவையும் தனது பதிவோடு இணைத்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. செல்வம் தெரிவித்துள்ளார். எனவே, இந்தச் சம்பவத்தை தவறான நோக்கில் அணுக வேண்டாம் என்று அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் காணொளியால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால், அதற்காக மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எம்.எல்.ஏ. செல்வம் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
