புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை அச்சுறுத்துவதாகவும், அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து மோசமாக நடத்தியதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி வரும் ஊடகவியலாளர் விஜயனை, விசாரணை என்ற பெயரில் தமிழக அரசின் காவல்துறை அலைக்கழிப்பதும், அச்சுறுத்துவதும் அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்ததற்காக விஜயனைக் காவல்நிலையத்திற்கு அழைத்து, அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து, கண்ணியக்குறைவாக நடத்தியது கண்டிக்கத்தக்கது.
நாடறியப்பட்ட ஊடகவியலாளர் விஜயன் மீது விசாரணை என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒடுக்குமுறை, மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும். 60 நாட்களிலேயே தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சமாகி, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதை விவாதிக்கும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதும், அரசின் தொலைக்காட்சியிலிருந்து பிற காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் கருத்துரிமை மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.
திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக தனது ஆட்சியை அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவது தமிழ்நாடு இதுவரை கண்டிராத பேரவலமாகும். பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமின்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும்.
தமிழக அரசின் இந்த கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ளாவிட்டால், ஜனநாயக சக்திகள் மூலம் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, விஜயனுக்கு காவல்துறையின் மூலம் விசாரணை என்ற பெயரில் எந்த நெருக்கடியும் தராமல், உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்," என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

