போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்' என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் விஜய் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். பிரத்யேக விழிப்புணர்வு பாடலுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
'நான் முழுமையாக அறிவேன். நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கை மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்' என்று முதல்வர் விஜய் வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மாரத்தானில் முதல்வர் விஜயும் பங்கேற்று ஓடினார். இந்த மாரத்தான், இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜயுடன் அமைச்சர்கள் ஆதவ், வெங்கட்ரமணன், ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 'ஸ்போர்ட்ஸ எடு; ட்ரக்ஸ விடு' என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் நோக்கத்தை வலியுறுத்தியது.