சென்னை: 'சைலண்ட் இன்புளூயன்சர்' இசை ஆல்பம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, தமிழ் சினிமாவின் தற்போதைய பிரச்சனைகளுக்கு நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி ஒரு தீர்வினை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போல திரையுலகிலிருந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். இது சினிமா துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்கள்தான். விஜய்யின் முதல்வர் பதவிக்கு மகிழ்ச்சியோடு, ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது. தற்போதைய சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சுதந்திரமாக செயல்பட ஒரு சூழல் வேண்டும். திரையரங்குகள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன, புதிய படங்களை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் என பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் விஜய்யின் ஆட்சி ஒரு விடிவுகாலமாக அமையும் என நம்புகிறேன்'
தொடர்ந்து பேசிய பேரரசு, 'சினிமாவுக்கு இந்தாண்டுக்கான மாநில விருதுகளை அடுத்த ஆண்டே வழங்க வேண்டும். 2026-க்கான விருதுகளை 2027-ல் வழங்கினால் பரவாயில்லை, 2037 வரை காத்திருக்க வேண்டாம். விருது பெறும் குழந்தை நட்சத்திரங்கள் பெரியவர்களாகி குழந்தைகளுடன் வரும் நிலை உள்ளது. எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் சினிமாவின் பிரச்சனைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீர்த்து வைத்தனர். ஆனால், அதன் பிறகு சினிமாவை சிலர் கைவிட்டதால் விருதுகள் தாமதமாகின்றன. எனவே, எம்.ஜி.ஆர், கருணாநிதி போல் விஜய்யும் சினிமாவை தன் குடும்பமாக நினைத்து, எங்கள் பிரச்சனைகளை உடனடியாகக் கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும். நீங்கள் சினிமாவை கைவிடாதீர்கள், மக்களும் உங்களை கைவிட மாட்டார்கள்' என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்புளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.