விஜய்யின் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – ஆர்.பி. உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், நடிகர் விஜய் தற்போது ஆடும் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட, 52 ஆண்டுகளாக அயராது உழைத்து வரும் அதிமுகவை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடியாரை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த ரகசிய திட்டத்தின் மூலம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து குதிரை பேரத்தில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சொல்லப்படவில்லை என்றும், தேர்தல் முடிவு வந்த பிறகு ஆட்சி அமைக்க வீரமணியை சந்தித்ததை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு கொடுத்து, இதுவரை கண்டிராத அன்பையும் பாசத்தையும் விஜய் பரிமாறிக் கொண்டதை நாடு பார்த்தது என்றும் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் பதவிக்கு ஆசை காட்டி அதிமுக குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதோடு, கழகத்தின் பொதுச்செயலாளரை சந்திக்காமலேயே, அரசியல் மரபுகளை மீறி, சட்ட திட்ட விதிகளை மீறி சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சந்தித்தது அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் என்று விஜய் கூறியது, 'ஆடு பகை, குட்டி உறவு' என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, விஜய்யின் அரசியல் சித்து விளையாட்டுகள் எடுபடவில்லை என்றும், அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் எடப்பாடியார் உடன் இணைந்து மக்கள் பணியை தொடர முடிவு எடுத்தபோது, அதிர்ந்து போன விஜய், அதிரடியாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்ததாகவும், இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்த அபத்தமான அரசியல் ஆட்டத்தை அவர் தொடர்ந்து ஆடுவதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இன்னும் 12 பேரை ராஜினாமா செய்ய வைக்கும் ஆட்டத்தை அவர் தொடர்வார் என செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நேரத்தில் மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவை அல்லு, சில்லுகள் என்று ஆணவத்தின் உச்சியில் விஜய் விமர்சித்ததை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிமுகவை தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கும், எடப்பாடியாரை தனிமைப்படுத்த வேண்டும் என்ற விஜய்யின் ரகசிய திட்டம் என்னவென்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, எந்த அரசியல் பின்புலம், சினிமா வசீகரம் இல்லாமல், தன்னுடைய அர்ப்பணிப்பாலும், அயராது உழைப்பாலும் தமிழக அரசியலில் யாரும் தவிர்க்க முடியாத சக்தியாக எடப்பாடியார் திகழ்கிறார். பல்வேறு சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், துரோகங்களைத் தாண்டி வலிமையோடு அதிமுகவை வழிநடத்தி வருவதால் தான் எடப்பாடியாருக்கும் விஜய்க்கும் தகராறு என்றும், இது வாய்க்கால் வரப்பு தகராறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, அதிமுகவை தனிமைப்படுத்தி விட்டால் த.வெ.க கட்சியை தேசிய அளவில் வளர்த்து விடலாம் என்று எடப்பாடியாரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால், காலம் மாறும்போது அரசியல் கடும் பின்னடைவுகளை விஜய் சந்திப்பார் என்றும், விஜய் ஒன்றும் அவதார புருஷனோ, தமிழ்நாட்டை காக்க வந்த கடவுளோ அல்ல என்றும், காலம் தந்த தீர்ப்பில் அவருக்கு முதலமைச்சர் அரியாசனம் கிடைத்திருந்தாலும், தலைகால் புரியாமல் ஆடும் ஆட்டம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம் என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version