காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் வகுப்பறைக்குள் சென்று, முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் புகைப்படத்தை சுவரில் மாட்டி ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தச் செயலுக்கு ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அரசுப் பள்ளிகள் சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்துவிட்டன. தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகனுக்கு பள்ளிகளின் பெருமையை மீட்டெடுக்கும் பெரும் பணி உள்ளது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியினர் என்ற தகுதியில், அரசுப் பள்ளிகளுக்குச் சென்று வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புவதாகவும், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சரையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் அவல நிலையைச் சரிசெய்ய வேண்டிய நேரத்தில், தவெகவினரின் இந்தச் செயல்பாடு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.