தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் பின்னணியில், தொகுதி மறுவரையறை பணிகள் குறித்தும், அதனால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் விவாதிக்க தமிழக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் அதனால் தமிழகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, மாநில எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை வகிப்பார். இதற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல்வர் விஜய் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியானது. அதிமுக எம்.பி.க்களான தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நிபந்தனை விதித்துள்ளதால் திமுக எம்.பி.க்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின. தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளதாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொகுதி மறுவரையறையில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிகவும் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்.பி. சுதீஷ் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யமும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பி.யான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யமும் கூட்டத்தை புறக்கணித்தது.
இருப்பினும், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் (12 உறுப்பினர்கள்), வி.சி.க. (2 உறுப்பினர்கள்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2 உறுப்பினர்கள்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1 உறுப்பினர்), மதிமுக (1 உறுப்பினர்) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக, தேமுதிக, பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

