வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு மேற்கே இன்று காலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக தலைநகர் கராகஸில் உள்ள பல கட்டடங்கள் குலுங்கின. கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரீபியன் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 700 பேர் காயமடைந்துள்ளனர். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரண்டு தொடர் நிலநடுக்கங்கள் வெனிசுலாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.