தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன், சட்டசபை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தாய்மாமன் சீராக இதை மட்டும் செய்யுங்கள் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தலைமையில் இன்று தொடங்குகிறது. இதில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் 717 கடைகள் மூடப்பட்ட நிலையில், மூடப்பட்ட இடங்களுக்கு அருகே கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி வருகின்றனர். தினசரி சுமார் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடப்பதாகவும், விடுமுறை நாட்களில் இது இரட்டிப்பாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'பொழுதுபோக்கு மன்றம்' என்ற பெயரில் 1,500 தனியார் மதுபானக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டாம் என்றும், புதிய உரிமங்கள் வழங்க வேண்டாம் என்றும் அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. எனவே, சட்டசபை கூட்டத்தொடரில் அரசு மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இது பெண்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமையும் என்றும், பூரண மதுவிலக்குதான் உண்மையான தாய்மாமன் சீராக இருக்கும் என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.