மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பிறந்தநாள் விழாவை கழகத்தினர் நடத்தக்கூடாது என்றும், யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வைகோ தனது அறிக்கையில், 'நான் 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், பள்ளி ஆவணங்களில் வயது குறைவாக இருந்ததால், மே 22 ஆம் தேதி பிறந்ததாக பதிவு செய்யப்பட்டது. எனது எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழிலும் மே 22 என்றே உள்ளது. இதனால் பலர் அந்த நாளில் வாழ்த்துக் கூறுவார்கள். அது எனது உண்மையான பிறந்தநாள் அல்ல என்பதை நான் தெரிவித்துவிடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'எனது இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, அன்றைய இந்திய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியபோது, இது எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்தேன். அதற்கு வாஜ்பாய், 'வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! எனது வாழ்த்துகள் அந்த நாளுக்குச் சேரட்டும்' என்றார்' என அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
'திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்ட நிலையில், நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?' என்று பலர் கேட்டதாகவும், பின்னர் தனது உண்மையான பிறந்தநாள் செப்டம்பர் 22 என்று அறிந்ததும், தனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் கொண்டாடியதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, துணைப் பொதுச்செயலாளர் ஜீவன் ஏற்பாட்டில், தனக்குத் தெரியாமலேயே பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு 'வைகோ 83' என்ற இலச்சினையுடன் செப்டம்பர் 22 ஆம் தேதியை மிகப் பெரிய விழாவாகக் கொண்டாட கழக முன்னணியினர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து முன்பணம் செலுத்தியிருப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஏற்பாடு தனது மனதில் உறுத்தலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை தனது இயக்கம் தோன்றிய நாள் முதல் தொடர்ந்து மாநாடுகளாக நடத்தி வருவதாகவும், அண்ணாவின் 100வது பிறந்தநாள் விழாவை தி.மு.க. கொண்டாடாத நிலையில், மதுரை மாநகரில் எழுச்சி மாநாடாக நடத்தியதாகவும் வைகோ நினைவு கூர்ந்துள்ளார். தி.மு.கழகம், அண்ணா பிறந்தநாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய பிரதமரையோ அழைத்து நடத்தவில்லை என்றும், மாறாக செப்டம்பர் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
'தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?' என்று தான் ஒரு மாநாட்டில் கேட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும், இந்தியாவின் பிரதமரை அழைத்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு வரவில்லை என்றும், ஆனால் தாங்கள் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று மெரினா கடற்கரையில் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, டாக்டர் பரூக் அப்துல்லா, பர்காஷ்சிங் பாதல், ஜார்ஜ் பெர்ணான்டஸ், மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோரை பங்கேற்கச் செய்து, விடியற்காலை இரண்டரை மணி வரை அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்தியதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, தனக்குத் தெரியாமல் பொருள் செலவு செய்து தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டதாக வைகோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 'வைகோ 83' என்ற இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், 'அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன். என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம். 'வைகோ 83' என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம்' என்று வலியுறுத்தியுள்ளார். இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால், தனது மன அமைதிக்காக, தனது எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்வதாகவும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

