கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதே, தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து அரசின் குறைகளை விமர்சிப்பது சரியல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "நான் தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறேன். அரசின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை அமைச்சர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் அழைத்து எனது கருத்தை தெரிவிப்பேன். சில சமயங்களில் முதலமைச்சருக்கே கூட தொலைபேசியில் அழைத்து எனது ஆலோசனைகளை கூறுவேன். ஆனால், பொதுவெளியில் வந்து அரசின் மீது விமர்சனங்களை முன்வைக்க மாட்டேன்.
திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களுக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை அமைச்சர்களிடம் நேரில் சென்று தெரிவிக்கலாம். அல்லது முதலமைச்சரிடமே நேரடியாக சென்று உங்கள் கருத்துக்களை கூறலாம். கூட்டணியில் இருந்து கொண்டே தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதும், பொதுவெளியில் விமர்சிப்பதும் ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால், அதற்குரிய முறையான வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுவெளியில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கூட்டணியின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
