திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்பட்டதாகவும், தற்போதைய விஜய் தலைமையிலான அரசு அதை சரி செய்துள்ளதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்தபோது இதுகுறித்து பேசினால், உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்போம் என்றும், வேறு கூட்டணிக்கு சென்றாலும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக தங்களை பிளாக்மெயில் செய்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஆனால் இன்று திமுக குதிரை பேரம் பற்றி பேசுவதாகவும், இந்த குதிரை பேரத்தை ஆரம்பித்ததே திமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். மதிமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, நான்காவது நாளே திமுகவில் சேர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற எம்.எல்.ஏக்கள் செல்வன் மற்றும் ராஜேந்திரன் குறித்து பேசிய வைகோ, அவர்கள் தன் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார். விலகிச் சென்றவர்களை விமர்சிப்பது தன் வழக்கம் அல்ல என்றும், உயிரைக் கொடுக்கும் தொண்டர்களே கட்சியை காப்பாற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும், தற்போதைய அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் வைகோ உறுதி அளித்தார்.