இன்று வைகாசி அமாவாசை தினமாகும். முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களின் படங்களுக்கு அலங்காரம் செய்து, தூப தீபங்கள் காட்டி ஆராதனை செய்வது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில், முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளை சமைத்து, அவர்களுக்குப் பிடித்தமான முறையில் படைத்து, காகத்திற்கு வழங்குவது சிறப்பானது. இதன் மூலம் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் குடிகொள்ளும், தம்பதி ஒற்றுமை மேலோங்கும், தரித்திரம் விலகும் என நம்பப்படுகிறது.
வைகாசி மாத அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வளங்களை அள்ளித் தரும் மாதமாக கருதப்படுகிறது. விஷ்ணு புராணத்தின்படி, வைகாசி மாதத்தில் புனித நதிகளில் நீராடி மகா விஷ்ணுவிற்கு துளசி இலைகளால் பூஜை செய்பவர்களுக்கு நற்பேறு கிடைக்கும். மேலும், இன்றைய தினம் பசுவிற்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து தானமாக வழங்கினால் கோமாதாவின் அருள் நிறைவாகக் கிட்டும். வைகாசி அமாவாசை வழிபாடு நீண்ட ஆயுள், செல்வ வளம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை அருளும்.
அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆனால், சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பெண்கள் விரதம் இருப்பதில் சில விதிமுறைகள் உள்ளன. முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளை சமைத்து, அவர்களின் புகைப்படங்களுக்குப் படைத்து, சில குறிப்பிட்ட காய்கறிகளை தவிர்த்து சமைப்பது வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும் என்பது ஐதீகம்.
அமாவாசை நாளில் செய்யக்கூடியவை: மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்தவை. அன்றைய தினம் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. காலையில் சீக்கிரம் எழுந்து சிவன், விஷ்ணுவை வணங்கி, பூமியில் ஒரு ஸ்பூன் பால் ஊற்றுவது வாழ்வில் இடையூறுகளைத் தாண்டிவர உதவும். சனி கோயிலில் கடுகு எண்ணெய், கருப்பு உளுந்து, இரும்புத் துண்டு, நீல மலர் தானம் செய்து, 'Om Nilanjansamabhas Ravuputra Yamagrajam.Chayamartandsambhut Namami Shanaishchara’ என்ற மந்திரத்தை 101 முறை ஜெபிப்பது கோபம், கெட்ட பலன்களை நீக்கும். பசு மாட்டுக்கு பழங்கள் வழங்குவது குடும்பத்தில் அமைதியையும், ஒற்றுமையையும் ஓங்கும். நீரில் எள்ளை கரைத்து வேண்டிக் கொள்ளலாம்.
அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை: இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது. துளசி இலையை பறிக்கக் கூடாது. இறைச்சி, முட்டை, மீன், வெங்காயம், பூண்டு உண்ணக்கூடாது. நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது. வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது. வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது. கடுமையான சொற்களை பயன்படுத்தக்கூடாது.