வாகனங்களில் 100 சதவீத எத்தனாலைப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான விதிகளை இறுதி செய்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். மஹாராஷ்டிராவின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் வேகன் ஆர் காரின் 100% எத்தனால் மாடலை அறிமுகப்படுத்தியதில் தனக்கு மகிழ்ச்சி என்றும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே 100% எத்தனாலில் இயங்கும் இரண்டு பிளெக்ஸ்-பியூல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் கட்கரி தெரிவித்தார். மேலும், டொயோட்டா, சுசுகி, எம்ஜி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், பெட்ரோலுக்கு ஒரு சிறந்த மாற்றாக எத்தனால் விளங்கும்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'நான் இதைப் பற்றி முதலில் பேசியபோது மக்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். சில நண்பர்கள் விமர்சிக்கவும் செய்தார்கள். இப்போது இத்தகைய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார். விரைவில், நாக்பூரில் ஒரு ஹைட்ரஜன் பம்ப் மற்றும் இரண்டு ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்களைக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டத்தையும் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எலக்ட்ரோலைஸர் மூலம் தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் பஸ்களில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும் என்றும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.