2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ஆடிய அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. வெறும் 15 வயதாகும் வைபவ், சர்வதேச பந்துவீச்சாளர்களைச் சமாளித்த விதம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வைபவின் ஆட்டம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாகக் கால்களை நோக்கி வரும் பந்துகளை எதிர்கொள்ள அவர் தனது முன்னங்கால்களை நகர்த்தி இடம் உருவாக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. இந்தச் சுதந்திரமான அணுகுமுறைதான் அவரை இவ்வளவு துணிச்சலாக விளையாட வைக்கிறது. அவரது இந்த இன்னிங்ஸ் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது' என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் மட்டுமின்றி, இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் மற்றும் இந்திய வீரர் ஷிகர் தவான் ஆகியோரும் வைபவின் திறமையைப் பாராட்டியுள்ளனர். பீட்டர்சன், 'சூர்யவன்ஷியின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் உள்ளது. கவர் திசையில் அவர் அடித்த சிக்ஸர் மிரட்டலாக இருந்தது' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் வெறும் 27 பந்துகளில் 97 ரன்கள் குவித்த வைபவ், 12 சிக்ஸர்களை விளாசினார். 125 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், வெறும் 3 ரன்களில் சதத்தைத் தவறவிட்டாலும், சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. நெருக்கடியான எலிமினேட்டர் போட்டியில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வைபவ், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளதை உறுதி செய்துள்ளார். அவரது அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த பெரிய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
