ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் வழியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பிலிருந்து முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, பொருளாதார தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் ஏற்க மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னரே, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. இந்த சூழலில், அமெரிக்கா ஈரானிடம் 5 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகள், ஈரானின் முக்கிய கோரிக்கைகளுக்கு நேர்மாறாக அமைந்துள்ளன.
அமெரிக்காவின் நிபந்தனைகளின்படி, முன்னர் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் மற்றும் கொள்கை முடிவுகளால் ஈரானுக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாது. மேலும், 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் ஒரு பகுதியை மட்டுமே தொடர அனுமதிக்கப்படும். முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களில் 25 சதவீதத்தை கூட விடுவிக்க மாட்டோம் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த கடுமையான நிபந்தனைகளை ஈரான் ஏற்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேசமயம், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஈரானின் முன்மொழிவுகளுக்கு அமெரிக்கா எந்த உறுதியான சலுகையையும் வழங்கவில்லை என ஈரானிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால், போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.