மேற்காசியாவில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. ஈரான் நேற்றிரவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தாங்கள் கண்டறிந்ததாகவும், உடனடியாக வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், இஸ்ரேல் தனது காசா எல்லையை தற்காலிகமாக மூடியுள்ளது. இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என ஈரான் பலமுறை எச்சரித்திருந்தது. தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காரணமாக, அமெரிக்காவுடன் நடத்தி வந்த மறைமுகப் பேச்சுவார்த்தையையும் ஈரான் நிறுத்தி வைத்திருந்தது.
இந்தச் சூழலில், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களிலேயே ஈரான் இந்த ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால், தற்போது மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.