ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தலாமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், மத்திய கிழக்கில் தற்போது ராணுவ நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை 'புயலுக்கு முந்தைய அமைதி' என டிரம்ப் வர்ணித்துள்ளது, ஈரான் தரப்புக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' தொப்பியை அணிந்திருக்க, அருகில் ஒரு அமெரிக்க கடற்படை அட்மிரலும் நிற்கிறார். இந்தப் பின்னணியில் ஈரானியக் கப்பல்களும், கொந்தளிப்பான கடலும், மின்னலும் காணப்படுகின்றன. இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
"இது புயலுக்கு முந்தைய அமைதி" என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்தப் படம், ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. ராணுவ பலத்தின் மூலம் இராஜதந்திர முட்டுக்கட்டையை உடைக்க டிரம்ப் முடிவு செய்தால், வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அவரது உயர்மட்ட உதவியாளர்கள் வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், ஈரான் விவகாரத்தில் டிரம்ப் ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறார் என்ற கருத்து பரவலாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த நகர்வுகள், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.