ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா முழுமையாகச் சட்டமாக மாற அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலும் அதிபர் கையெழுத்தும் அவசியமாகிறது. இது வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% வரி விதிக்க, இந்த மசோதா அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது. உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்யும் வகையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
'லின்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகள் சட்டம் 2026' என இந்த மசோதா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றியிருப்பது இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதா அல்லது அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்வதா என்பதை இந்த நாடுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த மசோதா, அதிபர் புடின் உள்ளிட்ட ரஷ்யத் தலைவர்கள், அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கவும் வழிவகுக்கிறது.
ரஷ்யா மீதான நடவடிக்கைகளுடன் சேர்த்து, இந்த மசோதா 1996 ஆம் ஆண்டின் ஈரான் மீதான தடைகள் சட்டத்தை 2031 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும். மேலும், இந்தச் சட்டம் ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டம் அமெரிக்காவின் இந்தப் புதிய நடவடிக்கையால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மாற்று வழிகளை ஆராய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச வர்த்தக உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா சட்டமானால், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய சவால்களைச் சந்திக்க நேரிடும்.
இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கி வருகின்றன. அமெரிக்காவின் இந்த புதிய சட்டம், இந்த நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் விரைவில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
