தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், தங்கத்தின் விலையில் பெரும் உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நகை வாங்குவதைத் தள்ளிப்போடவும், தவிர்க்கவும் மக்கள் முற்படுவார்கள் எனத் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஆண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தச் சூழலில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி, வெள்ளியையும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய குடும்பங்களிடம் உலகளாவிய தங்கத்தில் சுமார் 11 சதவீதம் உள்ளது. மேலும், தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு இடிஎஃப்-பில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூடுதல் வரி 5 சதவீதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் இறக்குமதியைக் குறைத்து, வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என வர்த்தகத் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, 2024 ஜூலையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது அது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.