இந்திய விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவசாய வளர்ச்சிக்கான நிதியம் (IFAD) புதிய முதலீட்டுக்கு களம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் 4 முதல் 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக IFAD துணைத் தலைவர் டோனால் பிரவுன் அறிவித்துள்ளார். இது இந்திய விவசாயத் துறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமையவுள்ளது.
1977-ல் தொடங்கப்பட்ட IFAD அமைப்பு, உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட விவசாயத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறுமையை ஒழிக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பு, முதன்முறையாக இந்தியாவின் தனியார் விவசாயத் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, 2026 முதல் 2033 வரையிலான ஒரு வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளது.
IFAD-ன் கொள்கை விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, அரசு நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் படியாக, இந்தியாவின் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் கைகோர்க்க உள்ளோம். மேலும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து 110 லட்சம் மாவட்ட திட்டங்களில் பங்கேற்கவும் உள்ளோம். எங்களது திட்டங்களுக்கு நபார்டு அமைப்பும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமங்களில் தானிய சேமிப்பு கிடங்குகள் மற்றும் உணவு பதப்படுத்தும் கூடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் விவசாயிகளின் சந்தை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரும் பயிர்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். கோதுமை, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்கு மாற்றாக சிறுதானிய சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிப்போம். சிறு விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுறவு சங்கங்களை அமைப்பதன் மூலம், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வோம் என IFAD துணைத் தலைவர் டோனால் பிரவுன் தெரிவித்துள்ளார்.