ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், உகாண்டாவிலிருந்து சமீபத்தில் இந்தியா வந்த 28 வயது பெண் ஒருவருக்கு உடல்வலி போன்ற லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் பெங்களூரு அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில், அந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் தற்போது எபோலா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.