திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசினார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற்றுத் தர தற்போதைய அரசுக்கு திறமையில்லை என்றும், விவசாயிகளுக்கு அரசு செய்த துரோகங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகள் குறித்து தான் பேசியதன் காரணமாகவே தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தவெக கட்சியினர் மீதான பாலியல் புகார்களில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், விவசாயிகளுக்காக திமுக போராடியதை திசை திருப்பவே தன்னை கைது செய்துள்ளதாகவும் உதயநிதி கூறினார். தான் யாரையும் தவறாகப் பேசவில்லை, யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், தான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கரூரில் 41 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு, ஒரு கட்சியின் தலைவர் அங்கிருந்து ஓடிவந்து, திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகிட்டு ஓடி, சென்னைக்குச் சென்ற பிறகும் கேள்விகளை எதிர்கொள்ளப் பயந்து ஓடியதை அவர் சுட்டிக்காட்டினார். அந்தக் கட்சியில் உள்ள அனைவரும் ஓடிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல தாங்களும் ஓடிவிடுவோம் என முதலமைச்சர் நினைத்துவிட்டதாகவும், ஆனால் விவசாயத்திற்கு காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்றுதான் தான் பேசியதாகவும், எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை என்றும், ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் உதயநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மீண்டும் இதுகுறித்து பேசுவேன் என்றும், இந்த வழக்கினை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
எந்தச் சூழ்நிலையிலும் மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க தாங்கள் அஞ்சியது இல்லை என்றும், என்றும் அஞ்சமாட்டோம் என்றும் திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டியில் ஆவேசமாக தெரிவித்தார்.
