தமிழக சட்டமன்றம் சினிமா தியேட்டராக மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், 'தமிழ்நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களையும் முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் தவெக அரசு கைது செய்கிறது. சட்டமன்றத்தில் நாம் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. சட்டம் ஒழுங்கு உட்பட எந்த விஷயத்திலும் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை' என்று அவர் கூறினார்.
சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், ஆளுங்கட்சி சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங் நடக்கும் இடம்போல் மாற்றிவிட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். 'தூய ஆட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, குதிரை பேரத்தில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்திலேயே தவெக அரசின் போலி பிம்பம் உடைந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் மின்சாரம் எங்கே எனத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர்' என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 'அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன். பேரவையில் முதல்வர் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை' என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கைது செய்யும் போக்கையும் அவர் கண்டித்தார்.
விவசாயிகள் மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் போராட்டங்களையும் முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்திப் பேசுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்த அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.