டிரம்பின் பேச்சு: உலக சந்தைகளில் நடுக்கம், கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்வு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கள் உலக சந்தைகளில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை திடீரென 6.5% உயர்ந்து பேரல் 78 டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல வாரங்களுக்கு நீடித்தது. கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு விலை கடுமையாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் அமைதிப் பேச்சுக்கு வந்து 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த போர் காலக்கட்டத்தில், கச்சா எண்ணெய் விலை பேரல் 130 டாலர் வரை உயர்ந்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதும், விலை படிப்படியாக குறைந்து பேரல் 70 டாலர் வரை சரிந்தது.

சமீபத்தில், அமெரிக்க ட்ரோன் விமானமான யுஎஸ்-எம்கியூ9 ஆளில்லா விமானம் தங்கள் வான் எல்லைக்குள் வந்ததாகக் கூறி, ஈரானின் புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தங்கள் கண்காணிப்பு மீது ஈரான் அத்துமீறியதாக தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் உருவாகும் பதற்றம் நிலவியது.

இந்தச் சூழலை மேலும் கொதிப்படையச் செய்யும் விதமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக தெரிவித்த கருத்து, முதலீட்டாளர்களை பெரும் கலக்கமடையச் செய்தது. ஈரான் – அமெரிக்கா இடையே புதிதாக மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால் உலக அரசியலில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இதனால் கச்சா எண்ணெய் சப்ளையில் மீண்டும் சிக்கல் வரலாம் என்ற அச்சத்தில், அதன் விலை திடீரென 6.5% அதிகரித்து பேரல் 78 டாலராக அதிகரித்தது. இந்தக் காரணமும் முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தைக் கொடுத்தது.

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் இருப்பதை அறிந்து, உலக நாடுகளின் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைத்ததால், மந்தமான நிலை காணப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய வார்த்தைகளால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளான பிரிட்டனின் எப்டிஎஸ்இ, பிரான்சின் சிஏசி, ஜெர்மனியின் டேக்ஸ் மற்றும் ஆசியச் சந்தைகளான ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.

அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உற்சாகமாக சென்ற நிலையில், அதிபர் டிரம்பின் பேச்சால், டோ ஜோன்ஸ் வர்த்தகம் தொடக்கமே ஒரு சதவீதம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. உலகச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவும், பரபரப்புடனும், பதற்றத்துடனும் காணப்பட்டது. இதன் எதிரொலி இந்தியச் சந்தைகளிலும் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க பங்குகளை வேகமாக விற்பனை செய்ததால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வரும் மாதங்களில் வட்டியை அதிகரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், பங்குப் பத்திரங்கள் மீது கிடைக்கும் ஈவுத்தொகை அதிகரித்திருப்பதும், முதலீட்டாளர்களுக்கு டாலர் மற்றும் பங்குப் பத்திரங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பங்குப் பத்திரங்கள் மீது முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி அதிகம், பலன் அதிகம், பாதுகாப்பு அதிகம் என்பதால், இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து, அழுத்தத்தை ஏற்படுத்தியது.

சர்வதேச சூழல் பதற்றமடைந்துவிட்டதால், மீண்டும் ஈரான் – அமெரிக்க இடையே போர் மேகம் சூழலாம் என்ற கணிப்பு, டாலர் மீதான தேவையை அதிகப்படுத்தியது. இதனால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 0.5% சரிந்து, ரூ.95.50 என நிலை பெற்றது.

அடுத்த இரு நாட்களும் சர்வதேசச் சூழலில் நிலவும் நிலைத்தன்மையைப் பொறுத்து இந்தியச் சந்தைகளில் வர்த்தகம் நடக்கும். அதிபர் ட்ரம்ப் பேச்சு, முதலீட்டாளர்களின் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் ஈரான் – அமெரிக்கா இடையே அமைதியான சூழல் நிலவுமா அல்லது ஏதேனும் புதிய மோதல் தொடங்குமா என்பதைப் பொறுத்து சந்தையில் வர்த்தகத்தின் போக்கு அமையும். குறிப்பாக, ட்ரம்ப் பேச்சால், கச்சா எண்ணெய் விலை திடீரென 6 சதவீதம் அதிகரித்துள்ளது, இதுவும் முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் இல்லாவிட்டால், கச்சா எண்ணெய் விலை ஏறிய வேகத்தில் இறங்கவும் வாய்ப்புள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version