அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 3 நாள் சீன பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவே உலகின் மிக முக்கியமான உறவு என இருவரும் நம்புவதாக இந்த சந்திப்பின்போது ஷி ஜின்பிங் தெரிவித்தார். இந்த உறவை சிறப்பான முறையில் பேணிப் பாதுகாப்பது அவசியம் என்றும், அதை ஒருபோதும் சீர்குலைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, அடுத்த மாதம் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், அவரது மனைவிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஒரு பெரும் கௌரவமாக கருதுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தனது அழைப்பில், 'அதிபர் ஷி அவர்களே, தங்களின் அன்பான வரவேற்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று வெள்ளை மாளிகையில் எங்களைச் சந்திக்குமாறு உங்களுக்கும், திருமதி பெங் அவர்களுக்கும் அழைப்பு விடுப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க மற்றும் சீன மக்களிடையேயான செழுமையான மற்றும் நீடித்த உறவுகளுக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த டிரம்ப், இது ஒரு 'மிகவும் சிறப்பான உறவு' என்றும், இந்த சந்திப்பு ஒரு 'அற்புதமான நேரமாக' அமைந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த வருகை இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.