நடிகை திரிஷா துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இன்று நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய அவர், முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு அரசுப் பதவிகளை வாரி வழங்குவதாகவும், நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் அது வியப்பளிக்காது என்றும் கூறினார்.
மேலும், மேகதாது, காவிரி போன்ற தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும், மாநிலம் சந்திக்கும் வறட்சி குறித்தும் கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், 'ஜனநாயகன்' திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டுமே வாய் திறப்பதாகவும், அந்தப் படம் தோல்வியடைந்ததால் முதல்வர் மூன்று நாட்களாக தலைமைச் செயலகம் வரவில்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் உண்மையும், உழைப்பும், கருணையும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விஜய் போல கவர்ச்சியாகவும், பஞ்ச் டயலாக் பேசியும் இளைஞர்களைக் கவர்ந்து அவர்களை ஏமாற்ற பழனிசாமிக்குத் தெரியவில்லை என்றார். மக்கள் மனதை அறிந்த பழனிசாமிக்கு நடிக்கத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் பதவிக்காகவே சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஆர்.பி. உதயகுமார் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலமைச்சர் விஜயை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஆனாலும் அவரை விஜய் மனிதாபிமானமின்றி பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு சென்றவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
