நீட் தேர்வு முறைகேடுகளை மட்டும் எதிர்ப்பதில்லை, மாறாக நீட் தேர்வு என்பதே அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என அக்கட்சி விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதே தவெகவின் முக்கியக் கோரிக்கையாகும். ஒருவேளை, இதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, ஒரு இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும், இதுவே நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய தவெகவின் பார்வை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை தவெகவின் வெற்றித் தலைவர் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும், மற்றவர்களின் உழைப்புக்கும், சிந்தனைக்கும், போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அறமற்ற அரசியல் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தவெக கேட்டுக்கொண்டுள்ளது. இதை மீறி, தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும் என்றும், அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

