தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தனித்தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு திமுக, விசிக, இந்திய முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தன. இருப்பினும், அதிமுக, பாஜ, பாமக கட்சிகள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நிர்வாக வசதிக்காகவும், வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்வதிலும் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் அரசியல் காரணங்களுக்காக தற்போதைய அரசு கொண்டுவரும் இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்ப்பதாக தெரிவித்தார். வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் தனித்தீர்மானத்தில், வரிசை எண் 3ல் கொடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ செல்லச்சாமி, எந்த மாநில உரிமைகளும் பாதிக்கப்படுவதை கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே ஒன்றிய அரசு இது போன்ற நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமலேயே புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதாகவும், இது ஏதோ ஒரு நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளதாகத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கக்கூடாது என்றும், முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை கட்சி மனதார வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பேசிய தளி ராமசந்திரன், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரல்வளை நசுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். முதல்வர் கொண்டுவந்த அரசினர் தனித்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாகவும், 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மத்திய மாநில அரசுகள் இணைந்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை சமமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாகவும், 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி என்பதற்குப் பதிலாக 7 முதல் 8 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி என நிர்ணயிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கணக்கிட்டார். மேலும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாகவும், அரசியலிலும் பெண்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 113 பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும், 850 உறுப்பினர்கள் இருந்தால் 215 பெண் உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் கூறினார். இருப்பினும், அவர் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.
பாமக சார்பில் பேசிய கணேஷ்குமார், உள்ளாட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுவரையறை செய்யப்படுவதாகவும், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 20 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவார்கள் என்றும், முதல்வர் உடனடியாக இந்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் பாமக கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். செவிவழிச் செய்தியை வைத்து இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பெண்கள் உரிமை பெறுவதற்கும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் எதிரான தீர்மானமாக இது உள்ளதால் பாமக ஆதரிக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும், இது தென்னிந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டும் தீர்மானம் என்றும் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிமுன் அன்சாரி, இந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற தந்திரம் இருப்பதாகவும், வடகிழக்கு மாநிலங்களைப் போல் தென் மாநிலங்களின் குரல்களும் கவனிக்கப்படாமல் இருக்கவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும் விமர்சித்தார். மகளிர் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரை மசோதா தோல்வியடைய திமுகவின் எதிர்ப்பு காரணம் என்றும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவை திமுக தலைவர் ஸ்டாலின் எரித்து எதிர்ப்பைக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் தொகுதி மறுநிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறது, வரவேற்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சபாநாயகர், இது எச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக விளக்கமளித்தார்.

