நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பேருந்து, லாரி, டெம்போ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தகவலைப் பலரும் பகிர்ந்து வந்தனர்.
இந்த பரவலான தவறான தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தற்போது விளக்கம் அளித்துள்ளது. 'தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையைக் காண்பித்தால் உள்ளூர்வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது முற்றிலும் தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் என்பது கிடையாது' என NHAI திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இருப்பினும், சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு சில கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 'உள்ளூர் மாதாந்திர பாஸ்' என்ற முறை நடைமுறையில் உள்ளது. இந்தச் சலுகையைப் பெற, சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
எனவே, வெறும் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு கட்டணமில்லாமல் செல்லலாம் என்று யாரும் கருத வேண்டாம் என NHAI அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர், அந்தந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி, முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு மாதாந்திர பாஸ் மூலம் சலுகை வழங்கப்பட்டாலும், அது முழுமையான கட்டண விலக்கு அல்ல என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். NHAI-யின் இந்த விளக்கம், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

