வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, நேற்றைய தினம் மட்டும் சுமார் 91,020 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். மேலும், ₹3.54 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் 90,011 பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ₹3.76 கோடி வசூலாகியிருந்தது. நேற்றைய தினம் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன வழிகளில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பக்தர்களின் வருகையை விரைவாகக் கணித்து, அவர்களை தரிசனத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர். நேற்று 35,193 பக்தர்கள் தங்களது மொட்டையை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
குறிப்பாக, ₹300 சிறப்பு ஆன்லைன் தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.