புனித தலமான திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் பவித்ரோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விழா ஆகஸ்ட் 22-ம் தேதி அன்று மரக்கன்று பிரதிஷ்டையுடன் தொடங்குகிறது.
ஆண்டு முழுவதும் நடைபெறும் அர்ச்சனைகள் மற்றும் பல்வேறு விழாக்களின்போது, பக்தர்களாலும், கோவில் ஊழியர்களாலும் அறியாமலோ அல்லது கவனக்குறைவாகவோ செய்யப்படும் சில தவறுகளால் கோவிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ஆகம விதிகளின்படி இந்த பவித்ரோற்சவ விழா நடத்தப்படுகிறது.
இந்த முக்கிய சேவையில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக, ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டின் மதிப்பு ரூ.5000 ஆகும். இந்த சிறப்பு டிக்கெட்டை பெறுவதன் மூலம், பக்தர்கள் நான்கு நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவ விழா மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்.
மேலும், இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்கள், எந்தவித இடையூறும் இன்றி ஏழுமலையானை நேரடியாக மூன்று நாட்கள் தரிசனம் செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள், காலை 7 மணிக்கு பாரம்பரிய உடையில் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து தரிசனத்தில் கலந்துகொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.