2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாவட்ட ஆட்சியர் சம்பளம் வாங்கும் ஊழியர் தான், அவரை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேசிய சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், தற்போது குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இது உத்தர பிரதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அணிந்திருந்த காலணிகளை சில உயரதிகாரிகள் துடைத்ததாக புகைப்படங்களில் கண்டதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் ஆசம் கான். இந்த பேச்சுக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராம்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவில், ஆசம் கான் குற்றவாளி என ராம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆசம் கான், இந்த தீர்ப்பால் பதவி இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
தேர்தல் சட்ட விதிகளின்படி, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான சிறைத்தண்டனை பெற்றால், மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவியை இழக்க நேரிடும். இந்த தீர்ப்பு, ஆசம் கானின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், உத்தர பிரதேச அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.