திருப்பதி மலைப்பாதைகளில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதைகளில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு கால்கள் கொண்ட ரோபோ நாயை பயன்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த ரோபோ நாயை வடிவமைத்துள்ளது. இதன் செயல்விளக்க ஆய்வை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மலையோரப் பாதைகள் மற்றும் பாறைகள் நிறைந்த கரடுமுரடான பகுதிகளில் இந்த ரோபோ நாய் எவ்வாறு செயல்படுகிறது என்பது விரிவாக சோதிக்கப்பட்டது.
இந்த ரோபோ நாயில், இருள் மற்றும் பனிமூட்டமான சூழலிலும் வனவிலங்குகளை துல்லியமாகக் கண்டறியும் தெர்மல் மற்றும் ஆப்டிகல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு நேரலை வீடியோ மற்றும் இருப்பிடத் தகவலை இந்த ரோபோ அனுப்பும்.
மேலும், வனவிலங்குகள் பக்தர்களை நோக்கி வருவதைத் தடுக்க, சத்தம் மற்றும் ஒளியை எழுப்பி அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ரோபோ நாய் தற்போது 20 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவின் போது, வனப்பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்த ரோபோ நாய் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மலைப்பாதைகளில் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
