கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே படிங்காரக்கரை பகுதியில் வசித்து வந்த உசைன் (42) என்ற மீனவர், தனது மனைவி பவுசியாவை (37) கொலை செய்து, அவரது உடலை கடலில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவர் உசைனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து மேலும் விவரம் அறியும் போது, கடந்த சில நாட்களாக பவுசியாவை காணவில்லை என அவரது உறவினர்கள் திரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க படகில் செல்ல முயன்றபோது, கடலில் ஒரு சாக்கு மூட்டை மிதந்து வருவதைக் கண்டனர். சந்தேகமடைந்த மீனவர்கள், அந்த மூட்டையை கரைக்கு எடுத்து வந்து பிரித்துப் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் ஒரு பெண் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக திரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூட்டையில் இருந்த சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பவுசியாவின் உடல் தான் அது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் உசைனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உசைன் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று இரவு, படகில் இருந்த மீன்களை அள்ள வேண்டும் என்று கூறி பவுசியாவை தன்னுடன் படகிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து பவுசியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், இந்த கொலை சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கடலில் வீசியதாக உசைன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பவுசியா, தனது கணவரின் அனுமதியின்றி சில வீடுகளில் வேலைக்குச் சென்றதாகவும், இதை உசைன் கண்டித்தும் அவர் கேட்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த உசைன் மனைவியை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவன் உசைனை போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
