திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமாகா (தவெக) வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது குறித்து மேலும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் பெரியகருப்பனை, தமாகா வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றிக்கு எதிராக, தபால் வாக்குகள் தவறாக எண்ணப்பட்டதாகக் கூறி, பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வெற்றி பெற்ற தமாகா வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமாகா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஜனநாயக நடவடிக்கையான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிப்பது முற்றிலும் தவறானது' என்று தமாகா தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், 'இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்திருக்கக் கூடாது. இது மிகவும் கடுமையான நடவடிக்கை' என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து, அதுவரை உரிய பதில்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.