திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு புனிதர் அல்ல என்றும், அவரைப் பாதபூஜை செய்ய திமுகவினருக்கு எந்தக் கூச்சமும் இருக்காது என்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடுமையாக விமர்சித்துள்ளது. அமைச்சர் சிவசங்கரின் கருத்துக்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் தவெக தனது எக்ஸ் தளத்தில் இந்த விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளது.
தவெகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "தீயசக்தி திமுகவின் முன்னாள் அமைச்சர், பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் புளுகுமூட்டை திரு.சிவசங்கர் அவர்கள், இன்று நம் வெற்றித் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேச்சால் மனம் பதறி, பதற்றத்தில் மனநிலை தவறி, உளறி இருக்கிறார். யோகிபாபுவின் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பேற்றுள்ளது போன்று பேசி இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், கரூர் தொகுதியில் அமைச்சர் சிவசங்கர் பேசியபோது, திமுக ஆட்சியில் காவல் துறையைக் கையாண்ட விதம் குறித்து தவெகவின் வெற்றித் தலைவர் சுட்டிக்காட்டியதை அமைச்சர் சிவசங்கர் தவறாகப் புரிந்து கொண்டு பேசியுள்ளார். "இன்றைக்கு இருக்கும் காவல் துறை, யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது திரு.சிவசங்கர் அவர்களே? அது தெரியாமல் உளறலாமா நீங்கள்?" என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கரூர் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்றும், முந்தைய காலங்களில் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதும் மக்களுக்குத் தெரியும் என்றும் தவெக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், உண்மையை மூடி மறைப்பது திமுகவின் மனநிலை என்றும் விமர்சித்துள்ளது.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக திமுக இருப்பதாகவும், ஊழல் கடலில் நீச்சல் அடிக்கும் திமுகவினருக்கு, செந்தில் பாலாஜி என்ற புனிதருக்குப் பாதபூஜை நடத்துவது கூச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் தவெக சாடியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைத் தீயசக்தி திமுகவில் சேர்த்துவிட்டு, தங்கள் கட்சி வாயை 'வாஷிங் மெஷினாக்கி' துப்புக்கெட்ட தனமாக மென்று துவைப்பதால் கட்சியின் அழுக்கு நீங்கிவிடாது என்றும் அமைச்சர் சிவசங்கரைக் குறிப்பிட்டுள்ளது.
அறிஞர் அண்ணா சொன்ன கதையை ஏதோ தங்கள் சிந்தனை போல உளறுவதுதான் அமைச்சர் சிவசங்கரின் அறிவு நேர்மையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. பிறர் அறிவைத் திருடுவதிலும் ஊழல் செய்வதுதான் திமுகவின் உண்மை குணம் என்பது வெளிப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
திமுகவின் ஒவ்வொரு ஊழலாக வெளிவரும்போது, அவர்களின் அழுக்கு மூட்டைகள் அவிழும் என்றும், அப்போது என்ன செய்வார்கள் என்றும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது. அன்றும், இன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது என்றும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளது.

