நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இயற்கை வைத்திய முறைகள் பல நோய்களை எளிதில் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால், மருத்துவமனைக்குச் செல்லும் தேவையே இருக்காது. அந்த வகையில், சில முக்கிய இயற்கை வைத்திய முறைகளை இங்கு காண்போம்.
மணத்தக்காளி கீரையை சமைத்தோ அல்லது அதன் பழத்தை வற்றலாக்கி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண் குணமாகும். ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறுடன் அரைத்து, காயவைத்து, பின்னர் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்திப் பொடித்து, இரண்டையும் கலந்து சாப்பிட்டால், தோலில் ஏற்படும் ஊறல் நோய்கள் குணமாகும்.
ஆலமரத்தின் விழுதையும், விதையையும் சம அளவில் எடுத்து பாலில் காய்ச்சி குடித்து வந்தால், தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்கும். எலுமிச்சம் பழச்சாறுடன் நல்லெண்ணெய் கலந்து அருந்தினால், நீர்க்கடுப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும். மாதுளம்பூ, கசகசா, வேம்பு ஆகியவற்றை பொடியாக்கி, தினமும் மூன்று முறை பாலுடன் சேர்த்து 5 மிளகளவு உட்கொண்டால், இரத்த சிறுநீர் பிரச்சனை குணமாகும்.
நவாச்சாரத்தை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் அரைத்து தொண்டைக்குழியில் தடவினால், தொண்டைப்புண் குணமாகும். தூதுவளையை மை போல அரைத்து, சுண்டைக்காய் அளவு காலை மாலை பசும்பாலில் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கை நடுக்கம் பிரச்சனை முற்றிலும் நீங்கும். பூசணி விதையின் பருப்பை பொடித்து, காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கோவை இலையை நெய்யில் வதக்கி, அதனுடன் சிறிது வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு அளவு கீரையை காலையில் உண்டு, அதன் பிறகு ஆகாரம் உட்கொண்டால், தாய்ப்பால் சுரக்கும். உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீர் மற்றும் சந்தனத்தை அரைத்து முகத்தில் தடவினால், சருமத்தின் நிறம் பொலிவு பெறும்.