தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் வசித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது காணாமல் போனார்.
கிராம மக்களும் உறவினர்களும் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அடுத்த நாள் மார்ச் 11 ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் காணப்பட்டன. இந்த கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தர்ம முனீஸ்வரன் என்ற ரவுடி இந்த கொலையைச் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே கோவில்பட்டியில் ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து, தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் இந்த பிளஸ்-2 மாணவியையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்து வெறும் 76 நாட்களிலேயே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.