திருத்தணி அருகே நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை பிரச்சனை காரணமாக 15 வயது சிறுவனை கோழிப்பண்ணை உரிமையாளர் அடித்துக் கொலை செய்து, பண்ணை வளாகத்திலேயே உடலை புதைத்து சிமெண்ட் சமாதி கட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு, சிறுவனின் தாயையும் அவரது இரு மகன்களையும் சுமார் 4 மாதங்களாக பண்ணையிலேயே சிறைபிடித்து மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த பயங்கர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷ் என்பவர் சிறுவனை வேலை பிரச்சனை காரணமாக கடுமையாக தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர், உடலை யாருக்கும் தெரியாமல் பண்ணைக்குள்ளேயே புதைத்து, அதன் மேல் சிமெண்ட் கொண்டு சமாதி கட்டியதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாயையும் அவரது இரு மகன்களையும் மீட்டு, பண்ணை உரிமையாளர் சுரேஷை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.