உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) நடத்திய ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில்’ கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் பாதியிலேயே தனது உரையை முடித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட வாரியாக நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டங்களில், இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு திருமாவளவன் எடுத்துரைத்திருந்தார். இதன் காரணமாக, உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தீபம் ஏந்தி ரேம்ப் வாக் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றத் தொடங்கினார். காலை முதலே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வி.சி.க தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால், மாநாட்டில் கடும் கூட்டம் நிலவியது.
மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரையாற்றுகையில், 'தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்துவதாகக் கூறினார். மேலும், 'ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலுமாக நிராகரித்து, மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயக இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும். பிற மொழி மற்றும் இன மக்களைப் பகையாகக் கருதாமல் அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்திற்கும் துணைநின்று கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த மாநாடு உறுதியேற்கிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 'தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்; இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆளும் கட்சி; இன்று அன்பு சகோதரர் ஜோசப் விஜயுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; விசிகவும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்' என்று தெரிவித்தார்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் அரங்கத்தை மீறி வெளியே லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருப்பதைக் கண்ட திருமாவளவன், 'உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்' என்று கூறி, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டார். மேடையிலும் தொண்டர்கள் குவிந்ததால், அவர் டென்ஷனாகி தொண்டர்களைக் காட்டமாகப் பேசி அங்கிருந்து கீழே அனுப்பி வைத்தார்.
இந்த திடீர் உடல்நலக்குறைவு மற்றும் பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்ட சம்பவம் மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

