தவெக மீதான சந்தேகம் தீர்ந்தது – திருமாவளவன்

தேர்தலுக்கு முன்பு த.வெ.க மீது சந்தேகம் இருந்ததால் விமர்சித்தோம், ஆனால் அந்த சந்தேகம் தற்போது தீர்ந்துவிட்டது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விசிகவை தவிர்த்து தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது. இதை அகந்தையோடு சொல்லவில்லை, கள அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். ஐந்து ஆண்டுகள் த.வெ.க அரசு தொடர்ந்தால் நல்லது" என்று குறிப்பிட்டார்.

தி.மு.க – அ.தி.மு.க பலவீனப்படுவதால் தனக்கு என்ன கவலை என்று கேட்கலாம் என்றும், அவர்கள் பேசும் அரசியலைத்தான் விசிகவும் பேசுவதாகவும் திருமாவளவன் கூறினார். பா.ஜ.க எதிர்பார்த்தது போலவே அ.தி.மு.க இன்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், இதை சில ஆண்டுகளாகவே எச்சரித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தனித்துப் போட்டியிடாமலும், வாக்கு வங்கியை உறுதிப்படுத்தாமலும் தொடர்ந்து கூட்டணியில் இடம் பெறும் வலிமை மிக்க இயக்கம் விசிக மட்டுமே என்றும் அவர் கூறினார். ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதுகுறித்து பதில் சொல்ல வேண்டும் என்றும், இதில் கருத்து சொல்வதற்கு தனக்கு எதுவும் இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

த.வெ.க-வின் ஒரு மாத ஆட்சி குறித்த எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது என்றும், த.வெ.கவினரை கற்றுக்கொள்ளும் காலமாகத்தான் எல்லோரும் இப்போது பார்க்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தி பேசுபவர்கள் கூட தன்னை 'கிங் மேக்கர்' என்கிறார்கள் என்றும், ஓரங்கட்டலாம் என நினைத்தால் விசிக மையத்தில் நிற்கும் என்றும் திருமாவளவன் கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version