திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை (01.07.2026) முதல் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல நீதிப்பேராணை மனுவின் (W.P.(MD) No.25439/2022) உத்தரவின்படி, கடந்த 14.11.2022 முதல் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை நடைமுறையில் உள்ளது. இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், 01.07.2026 முதல் தடை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.

பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் செல்போன் வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின்போது பக்தர்களிடம் செல்போன்கள் கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு/பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும். எனவே, 01.07.2026 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு வராத நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கோயில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version