வைகாசி மாத கிருத்திகை மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆன்மிகப் பயணமாக திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். சிலர் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.
கோயிலில் வழக்கமாக அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்படும். இருந்தபோதும், கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இரண்டு வரிசைகளிலுமே பக்தர்கள் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோயில் நிர்வாகம் போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. இதனால், அனைவரும் ஒரே வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
சன்னதி கதவுகள் திறக்கப்படாமல் தாமதமானதாலும், முறையான வழிகாட்டுதல் இல்லாததாலும் பொறுமையிழந்த பக்தர்கள், சண்முக விலாச மண்டபம் அருகே இருந்த இரும்பு தடுப்புக் கதவுகளைத் தள்ளி உடைத்து உள்ளே புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலிலும், கொளுத்தும் வெயிலிலும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சாதாரண பக்தர்கள் வெயிலிலும், கூட்டத்திலும் அவதிப்படும்போது, வி.ஐ.பி-க்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பக்தர்களின் இந்த செயல், கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டிப்பதாக அமைந்துள்ளது.